எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இனியும் அந்த கேள்வியை கேட்காதீர்கள்…! - கூட்டணி குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்!

”பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம், இனியும் அதுதொடர்பான கேள்வி கேட்காதீர்கள்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கூறிவிட்டேன். அ.தி.மு.க. முன்னணி தலைவர்களும் தெளிவுபடுத்திவிட்டனர். கடந்த 2023 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

அதன்பிறகும் கடந்த 5 மாத காலமாக மற்ற கட்சியினர் திட்டமிட்டு ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாக சொல்கிறோம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இல்லை. அதே நேரம் மக்களவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்று சொல்கிறார்கள். எந்த நேரத்தில் அமைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில், சரியான நேரத்தில் கூட்டணி அமைப்போம்”என்றார் எடப்பாடி பழனிசாமி.

logo
Andhimazhai
www.andhimazhai.com