பாஜக கூட்டணியில் எம்.எல்.ஏ. ஆனவர் திருமாவளவன் - சீமான் ஆவேசம்!

நாதக சீமான்
நாதக சீமான்
Published on

திருமாவளவனின் விமர்சனத்திற்கு பதிலளித்த சீமான், பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஆனது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். “சீமானும் விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்” என்று கூறிய திருமாவளவன், அவர்கள் அரசியலில் மதவாத சக்திகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்றும் சென்னை அருகே திருவேற்காட்டில் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், திருமாவளவனின் விமர்சனத்துக்கு கடுமையாகவும் கிண்டலாகவும் பதிலளித்தார். “என்னையும் விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன்தான் பிரசவம் பார்த்தார்” என்று கூறி சிரிப்பலைகளை ஏற்படுத்தினார். இது திருமாவளவனின் குற்றச்சாட்டை மறைமுகமாக மறுத்து அவரை கிண்டல் செய்வதாக அமைந்தது.

இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பிள்ளை என விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுடன் கூட்டணி வைத்து மங்களூர் சட்டமன்ற உறுப்பினராக ஆனது நானா அவரா? வாஜ்பாய்க்கு வீர வணக்கம் செலுத்துவது அரசியல் நாகரீகம் என சொல்கிறார். நான் ஒரு மேடையில் ஏறி பாரதியை பேசியது அரசியல் அநாகரிமா? நான் என் அண்ணனை மதித்து அமைதியா போறன். ஏனா? மோதலை எனக்கும் என் அண்ணனுக்கமானதாக மாற்றிவிட்டு திராவிடன் மஞ்சள் குளிப்பான். என் அண்ணனை எதிர்க்கவா நான் கட்சி ஆரம்பித்தேன்?, விசிக, பாமக,மதிமுக வா எங்களுக்கு எதிரி?

பெரியார் குறித்து ரவிக்குமார் எழுதிய கட்டுரை உள்ளது. அதை வெளியிட சொல்லுங்கள். இல்லையெனில் நான் வெளியிடுகிறேன்.

அறிஞர் அண்ணாவும், கலைஞரும் பெரியாரை எதிர்த்து பேசியதை விடவா நான் அதிகமாக பேசினேன் என கூற சொல்லுங்கள் நான் நிறுத்தி விடுகிறேன். திராவிடர் கழகத்தில் இருந்து திமுக ஏன் பிறந்தது? இன்னும் இந்த கிழவனை கைது செய்யாமல் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் என யார் பேசியது?

என் மொழியை ஏன் சனியன் சொன்ன, நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம் என பாரதி பாடுகிறார், நீ அதை வேசி கதை என சொல்ற வெறி ஏருமா ஏறாதா?” ஆவேசமாக பதிலளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com