வான் மகளிர் படை, நம்மாழ்வார் கல்லூரி... வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!

Agriculture budget
வேளாண்மை நிதிநிலை அறிக்கை
Published on

தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில் அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க சில திட்டங்கள்:

மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் விருது

1. கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, தினை, சாமை, குதிரைவாலி, எள் ஆகிய 10 பயிர்களை விளைவித்து அதிக மகசூல் காட்டும் சிறு, குறு விவசாயிகளுக்கு தலா 3 பரிசுகள் வீதம் மொத்தம் 30 பரிசுகள் வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெற்றி விவசாயி விருது

2) மாவட்ட அளவில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, பருத்தி ஆகிய 9 பயிர்களை விளைவித்து அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு வெற்றி விவசாயி விருது 90 பரிசுகள் வழங்க ரூ. 67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விதை சுத்திகரிப்பு நிலையங்கள்

3) விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில், சேலம் மாவட்டம் கங்கவல்லி, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம், விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு ஆகிய 3 இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தளிர்க்கீரை தொகுப்புகள்

4) முட்டைக்கோசு, பிரோக்கோலி, முள்ளங்கி, கொண்டக்கடலை, ஆளி விதைகள், வெங்காயம், பச்சைப்பயறு, கொள்ளு, எள், கோதுமை, கீரை வகைகள் ஆகியவற்றின் 7 முதல் 21 நாள்கள் உடைய நாற்றுகள், தளிர்க்கீரைகள் வளர்ப்பினை ஊக்குவிக்க விதைகள், விதை வளர்ப்புத் தட்டுகள், தென்னை நார்க் கட்டிகள், நீர்தெளிப்புக் கருவி, வழிமுறைக் கையேடு ஆகியவை அடங்கிய 20,000 தளிர்க்கீரை தொகுப்புகள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகர்புறப் பகுதிகளில் விநியோகம் செய்ய ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வான் மகள் படை

5) வேளாண்மையில் உரம், பூச்சிக்கொல்லி தெளித்தல், பயிர்க் கண்காணிப்பு உட்பட்ட பணிகளை எளிதாக்கவும், வேளாண் பணிகளில் ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் வெற்றி வான் மகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு டிரோன் இயக்குபவர் பயிற்சி, டிரோன் இயக்குபவர் உரிமம் வழங்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன் வழங்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தம்

6) நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை, புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகத் தரம் உயர்த்த ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மைக் கல்லூரி

7) தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சாக்கோட்டையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மைப் பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை, திருச்சியில் மண்டல மையங்கள்

8) விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைனேவார் , உணவு பதப்படுத்தும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்க திருச்சிராப்பள்ளியிலும் கோயம்புத்தூரிலும் மண்டல மையங்கள் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com