குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது!

TNPSC
டி.என்.பி.எஸ்.சி.
Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 9 வரை, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1 அன்று நடைபெறும்.

உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் - பதிவாளர் நிலை 2, ஆண் சிறை அலுவலர், சிறப்பு உதவியாளர் உட்பட 14 வகையான குரூப் - 2 பணியிடங்களில், மொத்தம் 41 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர், இளநிலை கணக்கர் உட்பட 44 வகையான குரூப் - 2ஏ பணியிடங்களில் 780 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 821 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பள்ளி அல்லது கல்லூரிகளில் கட்டாயம் தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வானது, நவம்பர் 1ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 வரை நடைபெறும். இதில் 300 மதிப்பெண்களுக்கான 200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுவர்.

விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் டி.என்.பி.எஸ். சி.யின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறான தகவல்களைத் திருத்த செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 9 வரை கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com