
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதியதாக 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் முயற்சி, அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
“இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அப்படியிருக்க, தற்போது புதிய 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்துவது எதற்காக?” என்று இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் கேட்டுள்ளார்.
”டாஸ்மாக் கடைகளை குறைப்பதே அரசின் நோக்கமென்றால், புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? மதுப்பழக்கத்தை ஒழிப்பதே இலக்கு என்றால், புதிய பிராண்டுகள் மூலம் விற்பனையை விரிவுபடுத்துவது யாருடைய நலனுக்காக?
ஏற்கனவே மதுப்பழக்கத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. குடும்ப வன்முறைகள், சாலை விபத்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில், மதுபோதையும் ஒரு முக்கியக் காரணியாக, காவல்துறை விசாரணைகளில் அடிக்கடி பதிவாகி வருகிறது.
மதுவால் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, மனநல மற்றும் சமூக ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது, சமூகப் பொறுப்புள்ள அரசின் செயலாக கருத முடியாது.
ஒரு புறம் டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என்று கூறிவிட்டு, மறுபுறம் 54 புதிய மதுபானங்களை அறிமுகப்படுத்துகிறோம் என்று அறிவிப்பது மக்களை ஏமாற்றும் இரட்டை நிலைப்பாடு அல்லவா?
தமிழக மக்களின் நலனில் அரசுக்கு அக்கறை இருக்கிறது என்றால், மது விற்பனையைக் குறைத்து, மதுபான கடைகளைக் குறைத்து, மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பதையே உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, புதிய 54 வகையான மதுபானங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மது விற்பனையை விரிவுபடுத்தும் திட்டங்களைக் கைவிட்டு, இளைஞர்களின் எதிர்காலத்தையும், பெண்களின் பாதுகாப்பையும், குடும்பங்களின் அமைதியையும், சமூகத்தின் ஒழுக்கத்தையும் பாதுகாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.