
முதலமைச்சர் விஜயை லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எஸ். என். சுப்ரமணியன் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொண்டு தொழில்துறையில் வலுவான தடம் பதித்துள்ளதையும், தமிழ்நாட்டில் பரவலாகவும், வெவ்வேறு துறைகளில் மேலும் 18,600 கோடி ரூபாய் முதலீட்டில் 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் அமைக்க முன்வந்துள்ளதையும் முதலமைச்சர் பாராட்டினார்.
மேலும், தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனம், தமிழ்நாட்டில் மேலும் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
திட்டங்களின் விவரம் :
1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தகவல் தரவு மைய விரிவாக்கத் திட்டம்.
2. கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில் 2,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னணுப் பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தித் திட்டம்.
3. திருவள்ளூர் மாவட்டத்தில், 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் 5,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும்தளம் விரிவாக்கத் திட்டம்.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.