
சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தன் பதிலுரையில் சரியாக பதில் சொல்லவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அதில் அதிருப்தி அடைந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, இதைக் கூறினார்.
“நான் முதல்வன் திட்டத்தில் 41 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அதை ஏன் முடக்கினீர்கள் எனக் கேட்டால், கன்னாபின்னாவென இஷ்டத்துக்கு ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுகிறார்கள். முறையான பதில் இல்லை. மின் வெட்டு தொடர்பாகக் கேட்டதற்கு மீண்டும் அவகாசம் கேட்கிறார்கள். அதையும் தி.மு.க. மீது பழியைப் போட்டுவிட்டு எந்தவிதமான கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை. பயிர்க்கடனில் விவசாயிகளைத் தி.மு.க. தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக முதலமைச்சர் சொல்கிறார். அவர்களைத் தூண்டிவிடுவதாக மிகவும் கேவலமாக, கொச்சைப்படுத்துகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்னையில் டி.ஜி.பி.யைப் பேசுகிறார். நாங்கள்தான் செய்யவில்லை... மாற்றமென உங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள்... ஆட்சிக்கு வந்து கிழித்துவிடுவதாகச் சொன்னீர்களே, இந்த 40 நாள்களில் உங்க காவல்துறை எதைக் கிழித்துவிட்டது? அனைத்து குற்றங்களிலும் ஆளும் கட்சியினரே ஈடுபடுகின்றனர்,” என்று உதயநிதி கூறினார்.