வைகோ
வைகோ

தமிழக இளைஞர்களுக்கான ரயில்வே வேலைகள் கேரளத்துக்குச் செல்வதா?- வைகோ கண்டனம்!

இரயில்வே பணியாளர் சேர்ப்பில் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்திற்கு ஒரு நீதி என வைப்பதா ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிப்ரவரி 2 ஆம் தேதி இரயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படும் என்று தெரிவித்து, அதற்கான கால அட்டவணையை வெளியிட்டார். அதன்படி தெற்கு இரயில்வேயில் சுமார் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் மதுரைக் கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்களும் அடங்கும்.

இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு இரயில்வேயில், சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் என மொத்தம் ஆறு கோட்டங்கள் உள்ளன. தெற்கு இரயில்வேயில் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் இரயில்வே தேர்வு வாரியங்கள் (Railway Recruitment Board) செயல் பட்டு வருகின்றது.

முன்னர் சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரைக் கோட்டக் காலியிடங்கள் சென்னை தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது மதுரைக் கோட்டக் காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.” என்றும்,

”இரயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவினால் தமிழக இளைஞர் மற்றும்  இளம் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளது. இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.  இது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் அநீதியாகும்.” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “1990 காலகட்டளில் ஜாபர் ஷெரீஃப் இரயில்வே அமைச்சராக இருந்பொழுதுதான் மொழி வாரி மாநிலங்களின் அடிப்படையில் இரயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டன.

முன்னர் கர்நாடக மாநிலம் ஹுப்பிலி கோட்டமானது செகந்திராபாத்தைத் தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால் அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள் முன்பு தெற்கு இரயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது.

அதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த விசாகப்பட்டினம் கோட்டம், புவனேஸ்வரத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்கரை ரயில்வேயில் (East Coast Railway) கீழ் வருகிறது. புவனேஸ்வரத்தில் ஒரு இரயில்வே தேர்வு வாரியம் உள்ளது. ஆனாலும் ஆந்திர இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக அங்கு ஏற்படும் காலியிடங்களை தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள செகந்திராபாத் தேர்வு வாரியம் மூலமாகவே இன்றும் நிரப்பப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழகத்திற்கு ஒரு நீதி என்று வகுத்து வைத்துள்ளது பெரும் கண்டனத்திற்கு உரியது.  தமிழகத்தில் ஏற்படும் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்களுக்குச் செல்லும் விதமாக உள்ள தற்போதைய நடமுறையை மாற்றி, மதுரைக் கோட்ட காலியிடங்களை சென்னை தேர்வு வாரியம் மூலம் தான் நிரப்பப்பட வேண்டும். இதற்கான உத்தரவினை ஒன்றிய இரயில்வே அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்.” என்றும் வைகோ கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com