சான்றிதழ் விண்ணப்பித்த பழங்குடியினப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வி.ஏ.ஓ. இடைநீக்கம்!

சான்றிதழ் விண்ணப்பித்த பழங்குடியினப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வி.ஏ.ஓ. இடைநீக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் வாரிசுச் சான்று கேட்டு விண்ணப்பித்த பழங்குடியினப் பெண்ணிடம் பாலியல்ரீதியாக கொடுமையில் ஈடுபட முயன்ற கிராம நிருவாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் நல்லாப்பாளையம் அருகில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர், சங்கீதா. 28 வயதான இவரின் கணவர் 2014ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவர் ஆரோக்கியதாஸிடம் மனு அளித்தார்.

அவரோ 5 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்டதாகவும் தான் 3 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்ததாகவும் தன் செல்பேசி எண்ணை வாங்கிக்கொண்ட ஆரோக்கியதாஸ் தன்னுடைய இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாகவும் அதை தன் சகோதரர் சூர்யா தட்டிக்கேட்டதையடுத்து இறப்புச் சான்று மட்டும் தந்ததாகவும் விதவைச் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதாகவும் சங்கீதா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதையடுத்து இன்று விழுப்புரம் கோட்டாட்சியர் சாகுல் அமீது, கிராம நிர்வாக அதிகாரி ஆரோக்கியதாசை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com