பண்ருட்டி வேல்முருகன்
பண்ருட்டி வேல்முருகன்

திருமாவை வீழ்த்த சதித் திட்டம்- வேல்முருகன் குற்றச்சாட்டு!

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர், திருமாவளவனை வீழ்த்த பாசிச சக்திகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியிருக்கிறார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2024 நாடாளுமன்றத் தேர்தலானது, நமது நாடு எந்த திசையில் பயணிக்கப் போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பாஜக.-ஆர்எஸ்எஸ். மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தனது இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றுவதற்காக எல்லாவிதமான சதிச்செயல்களையும் சதித் திட்டங்களையும் அரங்கேற்றி வருகிறது.

குறிப்பாக, பாஜக தலைமையிலான மோடி அரசு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, நீதிமன்றங்களின் மூலமாக, எதிர்க்கட்சியினரை அடிபணிய வைத்து விடலாம் என எண்ணுகிறது.

அந்த வகையில், பா.ஜ.க.வைத் தொடர்ந்து எதிர்த்துவரும், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சகோதரர் திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. அதோடு, திருமாவளவனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் மேற்கொண்டு வந்த திமுக நிர்வாகிகள் வீடுகளிலும், வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பாஜகவினர் பணம் பட்டுவாடா செய்து வரும் நிலையில், அவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படியாக சோதனை நடத்தவில்லை.

ஆனால், திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது கண்டனத்துக்குரியது. வருமான வரித்துறை சோதனையின் வாயிலாக, அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி தேர்தலில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது.

தோல்வி பயத்தில் இருக்கும் பாஜக, அனைத்து ஜனநாயக, சட்ட வழிமுறைகள் மீதும் நம்பிக்கை இழந்து, வெறிப்பிடித்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது. அப்படி தான், திருமாவளவனை அச்சுறுத்திப் பார்க்க நினைக்கிறது.

மோடி, ஆர்எஸ்எஸ் கூட்டம் கடந்த 10 ஆண்டுகளில்,  அரங்கேற்றியிருப்பது, பாசிச பயங்கரவாதம். இதனை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

எனவே, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களை சதித்திட்டத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என்ற பாசிச சக்திகளின் கனவு ஒரு போதும் ஈடேறாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்,  பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சக்திகளுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com