விஜயா வாசகர் வட்ட விருது அறிவிப்பு!
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் விருது எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகத்தின் ‘விஜயா வாசகர் வட்டம்’ சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகின்றன. 2024ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘ஜெயகாந்தன் விருது’க்கு எஸ். சங்கரநாராயணன், ‘மீரா விருது’க்கு கவிஞர் ஸ்டாலின் சரவணன், ‘புதுமைப்பித்தன் விருது’க்கு மயிலன் ஜி சின்னப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறந்த நூலகருக்கான ‘சக்தி வை.கோ. விருது’ சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அரசு நூலகர் பா. பேனிக் பாண்டியனுக்கும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான ‘வானதி விருது’ கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்ரீ மார்க்கண்டேயா புக் கேலரி ஜே. கல்யாணசுந்தரத்துக்கும் வழங்கப்படுகிறது.
ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சமும், மீரா, புதுமைப்பித்தன், வானதி, சக்தி வை.கோ. விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
ஒன்பதாவது ஆண்டாக நடைபெற இருக்கும் விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா, உலக புத்தக தினமான வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மாலை ராஜ வீதியில் அமைந்துள்ள விஜயா பதிப்பகத்தின் மேல் தளத்திலுள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெற உள்ளது.