
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ( ஜனவரி 21) அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பியூஷ் கோயல் முன்னிலையில் இணைந்துள்ளார். டிடிவி தினகரன் கூட்டணியில் இணைந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவில்லை.
என்டிஏ கூட்டணியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. எங்களது பங்காளி சண்டையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்று எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!” என்று தெரிவித்துள்ளார்.