குழந்தை எப்போது பெற்றுக் கொள்ளலாம்..? - நடிகரின் மனைவிக்கு பதிலடி கொடுத்த ஜோஹோ ஓனர்!

குழந்தை எப்போது பெற்றுக் கொள்ளலாம்..? - நடிகரின் மனைவிக்கு பதிலடி கொடுத்த ஜோஹோ ஓனர்!
Published on

இளைஞர்கள் 20 வயதில் திருமணம் செய்துகொண்டு குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியுள்ளது.

அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில் "அண்மையில் நான் ஐஐடி ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது யார் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கேட்டபோது பெண்களை விட அதிகமான ஆண்கள் கைகளை உயர்த்தினர்.

ஆனால் மாணவிகளுடன் உரையாடியபோது திருமணத்திற்கு முன்னர் நிதி ரீதியாக தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், நிதி ரீதியான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, “நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்கள் 20-களில் குழந்தைகளைப் பெற வேண்டும்.

அதைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் நான் அறிவுறுத்துகிறேன். அவர்கள் சமூகத்திற்கும் தங்கள் சொந்த மூதாதையர்களுக்கும் தங்கள் மக்கள் தொகை அதிகரித்து தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.

இந்தக் கருத்துக்கள் பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் அவை மீண்டும் வரும் என்று நான் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஶ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து, அவரின் கருத்துக்கு எதிரான வாதங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

ஒரு பயனர் தன் எக்ஸ் பதிவில், ”20 வயது காலக்கட்டம் வாழ்க்கைத் துணை தேடுவதற்கான வயதல்ல. அது உங்களைப்பற்றி நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வயது. அப்படி நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், அதற்குப் பிறகான வாழ்க்கையில் நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு இயந்திரமாக மாறிவிடுவீர்கள்" என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com