ஜெரால்டு மனைவி
ஜெரால்டு மனைவிOffice

என் கணவர் எங்கே? – பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி கண்ணீர் வீடியோ!

போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த சர்ச்சைக்குரிய நேர்காணலை எடுத்து ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்தது.

இந்த நிலையில், பெலிக்ஸ் ஜெரால்டுவை கடந்த பத்தாம் தேதி இரவு டெல்லியில் வைத்து தமிழக காவல் துறை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் இன்னும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்படாததால் அவருக்கு அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது மனைவி கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'கடந்த பத்தாம் தேதி இரவு 11:20 அவருக்கு அலைபேசி மூலம் பலமுறை அழைத்தபோது அவர் எடுக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் எடுத்து, தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதையடுத்து அருகில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் போனை கொடுத்தார். அவரிடம் எதற்காக எனது கணவரை கைது செய்திருக்கிறீர்கள் எப்போது ஊருக்கு கொண்டு வருவீர்கள்? என்று கேட்டபோது இரவு ரயிலில் வர முடியாது, அதனால் மறுநாள் காலையில் ரயிலில் அவரை திருச்சிக்கு கொண்டு வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.

மறுநாள் காலையில் தொடர்பு கொண்டபோது காலையில் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். அதன் பின்னர் பலமுறை அழைத்தும் அவர்கள் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை. எனது கணவரை எங்கே வைத்திருக்கிறார்கள்?, எங்கே கொண்டு செல்கிறார்கள்?. என்னச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. சவுக்கு சங்கரைப் போல எனது கணவரின் உயிருக்கும் போலீஸாரால் ஆபத்து ஏற்பட்டுள்ளது” என பெலிக்ஸ் ஜெரால்டுவின் மனைவி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com