மழை
மழைநன்றி: கதிரவ வேல்

அடுத்த 2 நாள்களுக்கு மழை அறிவிப்பு…! எங்கெங்கு பெய்யும்?

தமிழ்நாட்டில் அடுத்த இரு நாள்களுக்கு பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், ஓரிரு இடங்களில் மழை பெய்தும் வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாகக் கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) ஆகிய பகுதிகளில் தலா 60 மிமீ மழை பெய்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்சமாக அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (இயல்பை காட்டிலும்+7.2° செல்சியஸ்) ஈரோட்டில் 43.2° செல்சியஸ் (+5.7° செல்சியஸ்) வெப்பம் பதிவாகி உள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38° - 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 39.1° செல்சியஸ் (+1.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.9° செல்சியஸ் (-0.5° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் நிலவும் வானிலை குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

"தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோடை மழை: நாளை மே 8ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் மே 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் நாட்கள்: மே 10, 11 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 12ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல மே 13இல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த வெப்பம்: அடுத்த 24 மணி நேரங்களுக்குத் தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதேநேரம் மே 8 முதல் 11 வரை அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த 5 நாட்களுக்குக் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும். மேலும், இன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இன்றும் நாளையும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று மே 7ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com