
நூற்று அறுபதாவது நாளாகப் போராடிவரும் தூய்மைப் பணியாளர்களை இடைத்தரகர்கள் தூண்டிவிடுவதாகக் கூறுவதா என்று அமைச்சர்கள் மீது தொழிற்சங்கத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 5ஆவது, 6ஆவது மண்டலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்தும் பணி நிரந்தரம் கோரியும் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஊதியம், வேலையின்மை காரணமாக மன உளைச்சலில் நான்கு தூய்மைப் பணியாளர்கள் இறந்துவிட்டனர்.
இந்நிலையில் தொடர் போராட்டம் அரசாங்கத்தின் மீது பல தரப்பினரின் கேள்விகளை எழுப்ப வைத்துள்ளது.
ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையும் இவர்களின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தந்தார்.
அதைத் தொடர்ந்து, கடைசியாக கூவம் ஆற்றில் இறங்கி போராடி தூய்மைப் பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சூழலில், அவர்களை இடைத்தரகர்கள் வழிநடத்துவதாக அமைச்சர்கள் கூறியிருந்தனர். அதற்கு, போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி, ”முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செய்ததைத்தான் நாங்களும் செய்கிறோம்; அவர்கள் போராடினால் போராளிகள், நாங்கள் இடைத்தரகர்களா? இப்படி சொல்பவர்கள்தான் இடைத்தரகர்கள். போராடும் தொழிலாளர்கள் ஒரே சங்கமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆதரவு தரும் சங்கங்களின் பெயரில், ராம்கி தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்குச் சார்பானவர்கள் தூய்மைப்பணியாளருக்கு எதிராக செய்தித்தாள்களில் தகவல் வெளியிடுகிறார்கள்.” என்று கடுமையாகச் சாடினார்.