அன்புமணி- ஜெயக்குமார்
அன்புமணி- ஜெயக்குமார்

அன்புமணி எம்.பி.ஆனதற்கு யார் காரணம்? - ஜெயக்குமார் கேள்வி!

”அ.தி.மு.க.வுக்கு உயிர்கொடுத்ததே பா.ம.க.தான்” என்று அன்புமணி கூறியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ”ஜெயலலிதா இல்லை என்றால் பா.ம.க.வே கிடையாது” என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ”1998இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் 30 இடங்களில் வெற்றி பெற்று, அ.தி.மு.க.க.வுக்கு உயிர்கொடுத்தோம். அதைபோல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில், நாங்கள்தான் முதலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு சென்றோம். ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனார்.” என்று கூறியிருந்தார்.

இது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறியதாவது:

“ஜெயலலிதா இல்லை என்றால் பா.ம.க. கிடையாது. அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக யாரால் ஆனார். அவர் பெயர் யாருக்காவது தெரியுமா? அன்புமணியை இந்தியா முழுவதும் தெரிய வைத்தவர் ஜெயலலிதாதான்.. அதை மறந்துவிட்டு அன்புமணி பேசலாமா?

பா.ம.க. தொண்டர்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பினார்கள். ஆனால், திரைமறைவில் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.

ராமதாஸ் ‘தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடியவர்’. அதனால், ராமதாஸைப் பொறுத்தவரை சீட் மற்ற விஷயங்களில் பேரம் அதிகமானால், அதற்குத்தான் உடன்படுவாரே தவிர, கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது. அதெல்லாம் எதுவும் கிடையாது.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com