தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

உரிமைகளைத் தொலைத்தவர்கள் உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்! - தமிழிசை ட்வீட்!!

திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு, சேலம் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இளைஞரணி மாநாடாம் .... பிரம்மாண்ட முன்னேற்பாடாம்.... முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்...

தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு.... அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா? என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்....

இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர்.... இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே ஏன்? என்று கேட்கிறது அதே குரல்....

இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால்? ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்.... ஆனால் ஜனநாயகத்தில் ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்...

உரிமை மீட்பு மாநாடாம்? காவிரி உரிமையை தொலைத்தது யார்? கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்? கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்? நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்? உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்..

வாரிசுகளுக்கே அரியணையா? இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?

(தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள்....” என குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com