கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து இன்று (செப்.15) சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கிறேன்.
கரூர் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 606 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கரூர் பரப்புரைக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து 7 மணிநேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரூர் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் போதிய ஏற்பாடுகளை செய்ய தவறி விட்டனர்.
காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் இல்லை. உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
சம்பவம் நடந்த அதே இடத்தில் 2 தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தனர். கட்டுப்பாட்டோடு நடந்துக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக தவெக கூட்டத்தில் நடந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனம் திருக்காம்புலியூர் ரவுண்டானாவை அடைந்து கோயம்புத்தூர் சாலையை நோக்கி வலது பக்கத்தில் தவறான பாதையில் சென்றது.
அப்போது காவல் துறையின் அறிவிப்பை மீறி கேரவன் வாகனம் முனியப்பன் கோவில் அருகில் தவறான திசையில் வலதுபுறம் கடந்தது. அந்த வாகனத்தைத் தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் கேரவன் வாகனத்தை பின்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரச்சார வாகனத்தின் பின்னால் ஏராளமான பொதுமக்கள் வந்ததாலும், கரூர்நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரச்சார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அட்சயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தினர்.
அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த பதிலும் அளிக்காமல், தொடர்ந்துமுன்னேறிச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரை பலமுறை தொடர்பு கொண்டு பிரச்சார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும். அவர் தவெக கட்சியின் தலைவர் தனது உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வழிமுறைகளை மீறி, வாகனம் அட்சயா மருத்துவமனையிலிருந்து.30-35 மீட்டர் தூரம் சென்ற போது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலையச் செய்தது. இதனால், கூட்டத்தில் பல இடங்களில் மக்களை அலைமோதச் செய்தது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டனர்.
கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சிசெய்தனர். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்தனர். காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டனர். மேலும், அன்று இரவே நானும் கரூருக்குச்சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இதைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால் தான் உடனடியாக கரூருக்கு அன்றைய இரவே சென்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களுடன் ஆலோசித்து உத்தரவுகள் பிறப்பித்தேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டனர். பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
கரூர் மருத்துவமனையில் 700 படுக்கைகள் இருந்தாலும், கூடுதல் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. 24 மணி நேர அவசர சிகிச்சை, சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டன. கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும், குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால், அன்றைய இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அனுமதியின்படி, உயிரிழந்தவர்களை பிரேதப் பரிசோதனை செய்திட கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் அவர்களின் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைகள் / உடற்கூராய்வு செய்யப்பட்டது.
28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு முதல் உடற்கூராய்வு துவங்கப்பட்டு 28.09.2025 அன்று மதியம் 1.10 மணியளவில் 39-வது உடற்கூராய்வு முடிவுற்றது.
நான் எனது ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். இங்குள்ள அனைத்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இத்தகைய அனுபவம் கொண்டவர்கள் தான். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான் நடத்த வேண்டும்.
கட்டுப்பாடுகளை மீறும் போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள் தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவிய போது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக நான் கேட்டுக் கொண்டேன்.
எந்த அரசியல் கட்சித் தலைவரும் தன் கட்சித் தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறக்கிறதை விரும்ப மாட்டார்கள் என்று நான் அப்போது குறிப்பிட்டேன். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதே நேரத்தில் இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
16 நிமிடங்களுக்கு மேல் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கும் விஜய் என்ற பெயரை சொல்லவில்லை. தவெக தலைவர் என்று மட்டுமே கூறினார்.