கரூர் உயிரிழப்பு சம்பவத்தின் போது அழுதது ஏன்? – அன்பில் மகேஸ் நச் பதில்!

அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்
Published on

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் அழுதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்திருக்கிறார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் "தமிழ் முழக்கம்" மேடைப்பேச்சு - ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டுப் பயிலரங்க தொடக்க விழா இன்று நடைபெற்றது. அக்டோபர் 22 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டுப் பயிலரங்க தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சட்டமன்ற உறுப்பினர் தளபதி மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

விழாவிற்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கரூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழுத வீடியோ காட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் மற்றும் சிலர் விமர்சனம் செய்து பேசுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், "உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

உணர்ச்சிகள் அதிகமாகி, அறிவு குன்றி இருந்தால் விலங்குக்குச் சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்குச் சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கல்லைக் கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதனுக்குத் தன்னை மனிதனாக்க மறந்துவிட்டான்" எனக் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com