தவெக தலைவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என விசிக திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது;
"கரூர் துயரச்சம்பவம் குறித்து விசாரிக்க, அரசு தரப்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தபின்னரே குற்றவாளி யாரென முடிவாகி, அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை விஜய் சம்பவ இடத்துக்கு வந்து பேசிவிட்டு சென்றவர் மட்டுமே.
இதற்கிடையே சம்பவ இடத்தில் தண்ணீர் உணவு போன்ற வசதிகள் இல்லை போன்ற புகார்களில் உள்ளூர் நிர்வாகிகள் மீது உள்ள சில தவறுகள் தெரியவந்ததால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தவெக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் அந்த இடத்திலிருந்து சில ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பதால், அவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறான சமூக வலைதளப் பதிவு போட்டதால்தான் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.