கே.கே.சி பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்ப பெறுக - வலுக்கும் எதிர்ப்பு!

வள்ளி கும்மி கே.கே.சி. பாலு
வள்ளி கும்மி கே.கே.சி. பாலு
Published on

வள்ளி கும்மி கே.கே.சி. பாலுவுக்கு கொடுத்த கலைமாமணி விருதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் வள்ளி கும்மி கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணி விருதை கொடுத்ததை பலரும் கடுமையாக எதிர்த்து வருகிறனர். அதற்கு காரணம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை, ‘கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே...’ எனக்கூறி கே.கே.சி பாலு உறுதிமொழி ஏற்க வைத்ததுதான்.

இவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளராக உள்ள நிலையில், அவருக்கு கொடுத்த கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

விசிக வன்னியரசு
விசிக வன்னியரசு

“தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை,இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.

இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும்,பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி அவர்களும் நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன், பெரிய மேளத்துக்காக முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர்.

விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.

இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கேகேசி பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வள்ளி கும்மி மூலம் “வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்” என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு.

இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும்.

பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும். அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் திரு.கேகேசி பாலு அவர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

ஆகவே,தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தைப் பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com