
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை உச்சியிலிருந்து இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.
தூத்துக்குடி தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (24). இவருக்கும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் சுரேஷ் (29) என்பவருக்கும் கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது.
விடுமுறையில் சுரேஷ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், தம்பதியினர் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
பிரதான கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு ஏறிச் சென்றுள்ளனர்.
அப்போது மலை உச்சியில் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு இருவரும் பழங்களைக் கொடுத்துள்ளனர்.
அப்போது அனிதாவின் கையில் இருந்த பழங்களைக் கண்டு ஏராளமான குரங்குகள் அவரைச் சூழ்ந்துள்ளன. இதனால் பயத்தில் நிலைதடுமாறிய அனிதா 120 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
தீயணைப்பு மீட்புப் படையினர் சென்று பார்த்தபோது அனிதா இறந்துகிடந்தார். காவல்துறையினர் அவரின் சடலத்தைக் கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.