20 கோடி ரூபாய் அளவிலான தங்க நாணய முதலீட்டு மோசடியில் பெருநகர சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் ஆய்வாளர் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிந்துள்ளது.
இந்த மோசடித் திட்டத்தில் சேருமாறு ஆட்களை இவர் சேர்த்துக் கொடுத்தாரா என்று காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக வங்கி ஊழியர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாட்ஸாப் குழுவில் இந்த திட்டம் பற்றிய தகவல்கள் முதன்முதலாக 2023ஆம் ஆண்டு பரவியுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்க நாணயங்கள் அளிக்கப்படும் என்றும், மாதாந்திர வருமானம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இத்தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரவியதால் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், பணியில் இருக்கும் உயரதிகாரிகள் உட்பட ஏராளமானோர் இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர்.
தொடக்கத்தில் நம்பகத்தன்மையை உருவாக்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும் தங்க நாணயங்கள் கொடுக்கப்பட்டது. பின்னர், பெரும் தொகையை வசூலித்தப் பிறகு தங்க நாணயங்களோ, வருமானமோ கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தை முன்னெடுத்து நடத்தியவரான பிரபுமணி, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி ஆகிய இருவரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபுமணியை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஷீலா மேரி மீது துறை விசாரணை மேற்கொள்ள சென்னை நகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.