
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடம் மற்றும் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாத நிலையில், இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை சாமி தரிசனம் செய்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழ் மக்களும் இந்துக்களும் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை நிறைவேற்றாதது முட்டாள்தனம். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியில் தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதைத் யாரும் தடுக்க முடியாது. மலை மீது தீபம் ஏற்ற தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காசி தமிழ் சங்கமம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.