சட்டப்பேரவையில் அ.தி.மு.க. இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து அவைத் தலைவரிடம் தனித்தனியாக கடிதங்களை அளித்து வருகின்றன.
கடந்த 13ஆம்தேதியன்று நடைபெற்ற அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் அரசு வெற்றிபெற்றது. அதில், ஆதரவாக வாக்களித்த 144 பேரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 பேரும் அடக்கம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கொறடா உத்தரவை மீறி அவர்கள் வாக்களித்ததால், அவர்களைத் தகுதிநீக்கம் செய்யுமாறு சட்டப்பேரவைத் தலைவரிடம் எடப்பாடி தரப்பு கடிதம் அளித்தது.
எதிர் அணியாகச் செயல்படும் வேலுமணி தரப்பு, தாங்களே உண்மையான அ.தி.மு.க. எனவும் தங்கள் கொறடா விஜயபாஸ்கர் என்றும் கடிதம் அளித்தது.
மீண்டும் மீண்டும் இரு தரப்பினரும் அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் கொடுத்தும், நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் பிரபாகரிடம் கேட்டதற்கு, “ இரு தரப்புகளும் கடிதம் தந்து இரண்டு நாள்கள்தானே ஆகின்றன. அவை என் ஆய்வில் உள்ளன.” என்று சாவதானமாக பதில் அளித்தார்.