அ.தி.மு.க.விலிருந்து இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் 4 பேர் நீக்கம் ஏன்?
அ.தி.மு.க.விலிருந்து இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகள் இன்று திடீரென கட்சியைவிட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், “ கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த
சீமான் மரைக்காயர் (மண்டபம் பேரூராட்சிக் கழக செயலாளர்),
சீனி காதர்மொய்தீன் (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செய்யாளர், மண்டபம் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி),
பக்கர், (மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்),
ஹமீது அப்துலாகுமான் மரைக்காயர், (மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்)
ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இவர்கள் நால்வரும் அண்மையில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவின் ஆதரவாளர்கள் என்பதால் நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

