முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு
முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு

அரசு ஊழியர் ஸ்ட்ரைக் வாபஸ் ஏன் - ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் விளக்கம்!

அரசு ஊழியர்கள் நாளை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொண்டது ஏன் என போராட்டக் கூட்டுக்குழுவான ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கை விவரம்:

“ ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் 26.02.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அமைச்சர்கள் வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாக உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை அமைச்சர் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பத்திரிக்கைச் செய்தி ஒன்றினை வெளியிட்டார். போராட்ட நேரத்தில், அமைச்சரின் பத்திரிக்கைச் செய்தி கடும் அதிருப்தியினை ஏற்படுத்திய நிலையில், ஜாக்டோ ஜியோ இந்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்து, முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையினை ஏற்று, முதலமைச்சர் இன்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகள் திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்துரைத்தோம். அவர், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை இந்த அரசு நடைமுறைப்படுத்தாமல் வேறு அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிதி நிலைமையினைச் சீராக்கி, விரைவில் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இச்சந்திப்பின்போது, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, க. முத்துசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் முதலமைச்சரின் செயலாளர்களும் உடனிருந்தனர். முதலமைச்சரின் வாக்குறுதியினை ஏற்றும் ஜாக்டோ ஜியோவின் மீது முதலமைச்சர் கொண்டுள்ள மாறாத அன்பினையும் கருத்தில் கொண்டு, 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.” என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com