அறுவடை எந்திரங்களின் வாடகை உயர்வு!

நெல் அறுவடை எந்திரம்
நெல் அறுவடை எந்திரம்
Published on

” காவிரிப் பாசன மாவட்டங்களில் தனியார் அறுவடை எந்திரங்களின் வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு  உயர்த்தப்பட்டுள்ளது. உழவர்கள் ஏற்கனவே பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர்கள் மீண்டும், மீண்டும் சுரண்டப்படுவதை திமுக அரசு வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.”  என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் அறுவடை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. வழக்கத்தை விட நடப்பாண்டில் சம்பா சாகுபடி கூடுதல் பரப்பளவில் செய்யப்பட்டிருப்பதாலும்,  அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை ஒரே கட்டத்தில் தீவிரம் அடைந்திருப்பதாலும் அறுவடை எந்திரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைக் காரணமாக வைத்து தனியாருக்கு சொந்தமான பெல்ட் வகை  அறுவடை எந்திரங்களின் வாடகை ஒரு மணி நேரத்திற்கு  ரூ.4 ஆயிரமாகவும், டயர் வகை அறுவடை எந்திரங்களுக்கான வாடகை மணிக்கு ரூ.3500 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வளவு வாடகையை நிச்சயமாக உழவர்களால் தர முடியாது.” என்று தெரிவித்துள்ளார். 

” நெல் அறுவடை என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படக் கூடிய ஒன்றாகவே இருந்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும், அறுவடைக்கு மனிதவளம் கிடைக்காததாலும் இப்போது 90% அறுவடை, எந்திரங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அறுவடை செய்யப்படும் நிலப்பரப்புக்கும், அறுவடை இயந்திரங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி தான் இயந்திரங்களின் வாடகை பெருமளவில் உயர்ந்திருப்பதற்கு காரணம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

”அறுவடை இயந்திரங்களின் வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்று உழவர் அமைப்புகள் அரசைக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள், தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள், உழவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தனியார்களுக்கு சொந்தமான பெல்ட் வகை  அறுவடை எந்திரங்களின் வாடகை மணிக்கு  ரூ.2,600 ஆகவும், டயர் வகை அறுவடை எந்திரங்களுக்கான வாடகை மணிக்கு ரூ..1885ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான இந்த வகை இயந்திரங்களின் வாடகை முறையே ரூ.1,880, ரூ.1160 ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து விட்டது. இதற்குக் காரணம் திமுக அரசின் அலட்சியமும், உழவர்கள் மீதான சுரண்டலுக்கு மறைமுகமாக துணை போகும் மனப்பான்மையும் தான்.

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் முப்போக அறுவடைக்கும் தேவையான அறுவடை இயந்திரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், அதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. 2024&25ஆம் ஆண்டில் 130 கிராம வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், 26 வட்டார வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் உள்பட மொத்தம் 164 வாடகை இயந்திர மையங்களை தமிழக அரசின் வேளாண் பொறியியல்துறை நடத்தி வந்தது. ஆனால், 2025&26ஆம் ஆண்டில் இந்த மையங்களின் எண்ணிக்கை 130 ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களில் அரசு சார்பில் 30 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே வாடகைக்கு விடப்படுவதால்,  பெரும்பாலும் தனியார் அறுவடை இயந்திரங்களையே உழவர்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அறுவடை இயந்திரங்களில் பெரும்பாலானவை தனியாருக்கு சொந்தமானவையாக இருந்தாலும், அவற்றின் வாடகையை உரிமையாளர்களின் முகவர்களாக இருக்கும் இடைத்தரகர்கள் தான் நிர்ணயிக்கின்றனர். இதைக் கண்காணித்து உழவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படாமல் தடுக்க வேண்டிய வேளாண்துறை குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறது. உழவர்களும் வேறு வழியில்லாமல் கூடுதல் வாடகைக் கொடுத்து  அறுவடை இயந்திரங்களை பணியமர்த்த வேண்டியிருக்கிறது. இதனால் உழவர்களின் இலாபம் குறைகிறது.

குறுவை, சம்பா மற்றும் தாளடி என ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்தது 5 மாதங்கள் அரும்பாடுபட்டு நெல்லை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 மட்டும் தான் கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. அதிலும் கூட 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 வீதம் குவிண்டாலுக்கு ரூ.150 வீதம் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வழங்க வேண்டியுள்ளது. குவிண்டாலுக்கு ரூ.131 மட்டுமே ஊக்கத் தொகை வழங்கும் திமுக அரசு, கையூட்டாக 150 ரூபாயை பறித்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி அறுவடை இயந்திரங்களுக்கும் கூடுதல் வாடகை கொடுக்க வேண்டியிருப்பதால் உழவர்களுக்கு எதுவுமே கிடைப்பது இல்லை. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பதற்கு இது தான் அவல எடுத்துக்காட்டு.

அறுவடை இயந்திரங்களின் வாடகைக் கொள்ளையைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிதானது தான். அரசு மற்றும் தனியார் அறுவடை இயந்திரங்களை உழவர்கள் வாடகைக்கு எடுப்பதற்காக செல்பேசி செயலி ஒன்றை உருவாக்குவதன் மூலம் கட்டணக் கொள்ளையை தடுக்க முடியும். அதுமட்டுமின்றி, தேவையான உழவர்களுக்கு, தேவையான நேரத்தில் அறுவடை இயந்திரம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். இதன்மூலம் உழவர்களுக்கு நியாயமான வாடகையில் அறுவடை இயந்திரம் கிடைப்பது மட்டுமின்றி, இயந்திரங்களின் உரிமையாளர்களுக்கும் அதிக வருவாய் கிடைக்கும். எனவே, இந்த முறையை அரசு செயல்படுத்த வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com