இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணிநீக்கம் செய்யக் கோரும் (இம்பீச்மெண்ட்) தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுத்து, இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தைச் செய்துள்ளது அதிமுக; இதன் மூலம் பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்வது அம்பலமாகி உள்ளது என்று சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று மாலையில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
”விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்துள்ளனர்.
"வெறுப்புப் பேச்சு", "வகுப்பு வேற்றுமையைத் தூண்டுதல்", "அரசியலமைப்பை மீறுதல்" ஆகிய குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வில்சன், அப்துல்லா ஆகியோர் ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் அ.தி.மு.க.வில் நான்கு உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர்கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திடவில்லை.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அவர்களுடன் தோளோடு தோள்நின்று ஆதரவாக செயல்பட்டு வரும் தி.மு.க.. மதப்பிரிவினைவாதிகளுடன் என்றும் கைகோர்க்க மாட்டோம் என அன்றுமுதல் இன்றுவரை நெஞ்சுரத்தோடு களமாடி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் அடிமை அ.தி.மு.க.வோ ஒரு பக்கம் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பா.ஜ.க.வின் கள்ள உறவைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சி.ஏ.ஏ.வை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயல்பட்ட அக்கட்சி, தற்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது இப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அம்பலமாகி உள்ளது.
"இஸ்லாமியர்கள் கனிவு, சகிப்புத்தன்மை இல்லாத ஆபத்தானவர்கள்" என்று பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சொற்களைப் பயன்படுத்திப் பேசியிருந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாருக்கு எதிராய் ஒரு கையெழுத்து போடக்கூட நிலையில்தான் அதிமுக உள்ளது. "இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே!?" என வாய்கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் கலைந்து போய் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது.
இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாகக் கொண்டது அ.தி.மு.க.வின் தற்போதைய தளகர்த்தா பழனிச்சாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள்.” என்று அமைச்சர் நாசர் குறிப்பிட்டுள்ளார்.