இலங்கையின் அட்டூழியம் - நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசம்!

மாநிலங்களவையில் வைகோ
மாநிலங்களவையில் வைகோ
Published on

பத்து நாள்களுக்கு முன்னர் கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களைத் தாக்கி இலங்கைப் படையினர் கைதுசெய்து அட்டூழியம் செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் ம.தி.மு.க. உறுப்பினர் வைகோ கடுமையாகச் சாடியுள்ளார்.   

மாநிலங்களவையில் அவர் இன்று பேசியது :

”இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைதுசெய்யப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன; 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20ஆகவும் உயர்ந்துள்ளன; இதனால் மீனவக் குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துவருகின்றனர்; அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களைக் கட்டவேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

அண்மையில் 13.07.2025 அன்று ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது.

பாக். விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப்  பறிக்கும் வகையில், இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். 

எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும்.

தொடர்ச்சியான கைதுகள் மீனவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது மட்டுமல்லாமல், பாக் விரிகுடா பகுதியில் மீன்பிடிப்புத் தொழிலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மீன்பிடித் தொழிலின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு, நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப்பெற வேண்டும்.” என்றும் வைகோ கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com