ஈரோட்டுக்கு 8 அறிவிப்புகள், எடப்பாடி மீது எகிறல்- ஸ்டாலின் அதிரடி!

ஈரோடு அரசு நலத் திட்ட விழாவில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்
ஈரோடு அரசு நலத் திட்ட விழாவில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஈரோட்டில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்துக்காக புதியதாக எட்டு திட்டங்களை அறிவித்தார். மேலும், தி.மு.க. அரசு மீது குறைகூறிய எடப்பாடி பழனிசாமியைக் கிண்டலாகக் குறிப்பிட்டும் பேசினார்.  

மு.க.ஸ்டாலின் பேசியது:

” முதல் அறிவிப்பாக நான் சொல்வது, ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 15 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடமும், ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்திற்கு 8 கோடியே 3 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களும் கட்டப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 50 கிராமங்கள், சென்னிமலை, சித்தோடு, நசியனூர், கே.சி.பாளையம் பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல், சத்தியமங்கலம் மற்றும் நம்பியூர் ஒன்றியங்களுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம்,
27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்திற்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.

நான்காவது அறிவிப்பு - அந்தியூர் ஒன்றியத்திலுள்ள கத்திரிமலைப் பகுதி மலைகிராம மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில், 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மின் இணைப்பு வசதிகள் வழங்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு – மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டத்தில் குரங்கன்பாளையம் நீர்ப்பாசன அமைப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் உழவர்களுக்கு பலனளிக்கும் வகையில், 15 கோடி ரூபாய் செலவில், இந்தத் திட்டம் மேம்படுத்தப்படும்.

            அடுத்து, ஆறாவது அறிவிப்பு - உயர்கல்வித் துறையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், 10 கோடியே 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உலகத் தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதிகள் மற்றும் குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு - ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய  15 துணை சுகாதார நிலையங்களுக்கு, 6 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும்.

எட்டாவது அறிவிப்பு - பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வீர நாராயணப் பெருமாள் திருக்கோயில் பக்தர்களுக்கான வசதிகள், 10 கோடி ரூபாய் செலவில் அமைத்துத் தரப்படும்.

இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும்! வெறும் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, கண்டுகொள்ளாமல் போகும் முந்தைய அரசு இல்லை இது. சொன்னதை செய்வோம் என்று செய்து காட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நடக்கும் உங்கள் ஸ்டாலினுடைய திராவிட மாடல் அரசு இது!

நேற்று, நான் ஈரோட்டிற்கு வந்தவுடன், இந்த மாவட்டத்தில், நடந்துகொண்டிருக்கக்கூடிய பணிகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ததோடு, மாவட்ட ஆட்சியருடன் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். அதுமட்டுமல்ல, இன்றைய நாளேடுகளை நீங்கள் பார்த்தால் தெரியும். முதல்வரின் கவனத்திற்கென்று சில பிரச்சனைகள் என்று தலைப்பிட்டு அதில் கட்டுரையாக எழுதியிருந்தார்கள். அதை தற்போது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கி கவனிக்க சொல்லியிருக்கிறேன். இப்படி தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், நம்முடைய அரசின் நலத்திட்டங்களால் பயனடையும் தகவல்களையும் மாவட்ட ஆட்சியரிடம் வாங்கி பார்த்தேன்… அந்த தகவல் எனக்கு பெருமையாகவும், மலைப்பாகவும் உண்டாக்கியது… ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு செய்திருக்கிறோமா! நம்முடைய திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பான திட்டங்களை, அவைகள் எல்லாம் முழுமையாக சொல்வதற்கு நேரமில்லை. டேட்டாவை மட்டும், சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்…

பெண்களின் பொருளாதார விடுதலைக்காக நம்முடைய அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.  அந்தத் திட்டத்தில், இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 4 இலட்சத்து 90 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுகிறார்கள்! அதேபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு சுவையான – சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தில், 46 ஆயிரத்து 355 மாணவர்கள் வயிறார சாப்பிடுகிறார்கள்! மாணவிகளின் உயர்கல்வி கனவுக்கு உறுதுணையாக இருக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்
10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்!

அதேபோல், மாணவர்களின் உயர்கல்விக்கு துணை நிற்கும் ’தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மட்டும் 1 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள் மூலமாக இதுவரை 7 ஆயிரத்து 630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது! நேற்று நான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், இரண்டு கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினேன். அந்தத் திட்டத்தின் மூலம் இந்த மாவட்டத்தில் மட்டும் 6 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் 39 ஆயிரத்து 762 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆயிரத்து 528 பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. 78 ஆயிரத்து 235 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 484 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்த பட்டியல், மாவட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மட்டும், இதுவரை 830 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பணிகள், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 73 பாலங்கள் கட்டும் பணிகள், 201 கோடி ரூபாய் மதிப்பீட்டுத் தொகையில் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 71 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளும் நடைபெற்று வருகிறது. 

75 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தினால்தான், மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்! இதை கடந்த கால ஆட்சியாளர்கள், அதாவது, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றவர்களால், இந்த வெற்றிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை… அவர்களைப் பொறுத்தவரைக்கும் தி.மு.க. அரசு தொடர்ந்து திட்டங்களை அறிவிக்கிறார்களே, சொன்னபடி நிறைவேற்றுகிறார்களே, அதனால் அவர்களுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவும் கிடைக்குதே என்று வயிற்றெரிச்சல் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய மாண்புமிகு பழனிசாமி அவர்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆளும்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால், தி.மு.. ஆட்சி மேல் குற்றம் சாட்ட எதுவும் இல்லாமல், எதுவும் கிடைக்காமல் பொய் சொல்லக்கூடாது. பழனிசாமி என்ற தனிநபராக அவர் பொய் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

அண்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழைபொழிவு இருந்தது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து எதிர்கொண்டோம். பல இலட்சம் மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறோம். மழை தொடங்கியவுடன் துணை முதலமைச்சரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் களத்திற்கு அனுப்பினேன். மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்ந்து நானே தொலைபேசியில் பேசினேன். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு அடிக்கடி சென்று, அரசு செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

அதுமட்டுமல்ல அதிக அளவில் பாதிப்புக்குள்ளான, விழுப்புரம் மாவட்டத்திற்கு நானே நேரில் சென்று உதவிகளை செய்தேன். இரவு பகல் பார்க்காமல், அரசு இயந்திரம் பணி செய்த காரணத்தினால், ஓரிரு நாட்களில் பாதிப்புகளில் இருந்து மக்களை  நாங்கள் மீட்டோம். அதோடு, மழைக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்யவேண்டுமோ, அதையெல்லாம் துரிதமாக செய்து, நாங்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து செய்துக்கொண்டு இருக்கிறோம். நிவாரண தொகைகளை வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

ஒன்றிய அரசின் நிதி கூட வருகிறதா, வரவில்லையா என்பது பற்றியெல்லாம் காத்திருக்காமல், கவலைப்படாமல், மாநில அரசே உடனடியாக இது எல்லாவற்றையும் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதை பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், இட்டுக்கட்டிய கற்பனைக் குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் திரு. பழனிசாமி அவர்கள் இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

சொல்கிறார்! முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டார்கள் என்று ஒரு பொய்யை பரப்பினார். ஆனால், உண்மை என்ன?  ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரைகளிலுள்ள கிராமங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை செய்ததால்தான், பெரிய அளவில் உயிரிழப்புகளை நாங்கள் தவிர்த்திருக்கிறோம்.  இதுதான் உண்மை!

ஆனால், ஒன்றை மறந்துவிடக் கூடாது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது நிலைமை என்ன? செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்ட காரணத்தினால், 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள்! முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் திடீரென்று ஏரியை திறந்து விட்ட காரணத்தினால், சென்னையில் 23 இலட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுஅப்போது இருந்த அமைச்சர்கள் யாரும் களத்திற்கு போகவில்லை! தன்னார்வலர்கள் தான் உதவி செய்தார்கள்! அதெல்லாம் மறக்க முடியாது. இல்லை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் நினைக்கிறாரா?

புயல், வெள்ளம், பூகம்பம் இதெல்லாம் இயற்கை சீற்றம்! ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்தது,
Man-Made Disaster!
மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு! இதை நான் சொல்லவில்லை, சி..ஜி அறிக்கையிலேயே பதிவு செய்திருக்கிறார்கள்! .தி.மு.. ஆட்சிக்காலத்தில் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தார்கள்! இதையெல்லாம் மறைத்து, சாத்தனூர் அணையை வைத்து பழனிசாமி இன்றைக்கு பொய் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பொய்யையும் சட்டமன்றத்தில் விரிவாக நாங்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினோம்.

அதனால், உடனே அடுத்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை எடுத்துக்கொண்டார். நம்முடைய அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பே, சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், அந்த தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி என்ன பேசினார்? ஏலம் விட்ட ஒன்றிய அரசை கண்டிக்காமல், நம்முடைய அரசை குறை சொல்லி பேசினார். அதற்குரிய பதில்களையெல்லாம், அமைச்சர்கள் தெளிவாக பதில் சொன்னார்கள்! அதை கேட்காமல் சொன்னதையே, திரும்ப திரும்ப சொன்னார். இந்த வாழைப்பழம் காமெடி தெரியும் அல்லவா, இந்த செந்தில்- கவுண்டமணி காமெடி. அது போன்று  சட்டமன்றத்தில் திரும்ப திரும்ப சொன்னார். நான் அப்போது உறுதியோடு எழுந்துநின்று சொன்னேன். நான் முதலமைச்சராக இருக்கும் வரை, அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டேன்-என்று தெளிவாக சொன்னேன். அதையும் கேட்கவில்லை!

சட்டமன்றம் முடிந்த பிறகு பார்த்தால், டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு காரணமான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததே .தி.மு..தான் என்ற செய்தியை நாங்கள் வெளியே வந்த பிறகு கேள்விப்பட்டோம். உடனே அதையும் மழுப்ப தொடங்கினார். அதற்கடுத்து மற்றொன்று சொன்னார்அரசை விமர்சனம் செய்து, அவர் சத்தம் போட்டு கத்தி பேசினார். வாழ் கிழியப் பேசினார். அவற்றையெல்லாம் ஒளிபரப்பாகி இருந்தால், ஆட்சியே கலைந்திருக்குமாம். என்ன ஒரு காமெடி இது! நான் அவருக்கு அன்போடு, பொறுமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

பழனிசாமி அவர்களேகாலி குடம் உருண்டால், சத்தம் அதிகமாத்தான் வரும். அதேபோல் நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும், அதில் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லைக் குத்தி, பொங்கல் வைக்க முடியாது. 4 வருடம் ஆட்சியிலிருந்து உங்கள் பதவி சுகத்திற்காக, சுயலாபத்திற்காக, பலருக்கு துரோகம் செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்தது உங்கள் கட்சிதான் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்போதும்கூட, நீங்களும் சரி, மாநிலங்களவையில் இருக்கும் உங்கள் எம்.பி.க்களும் சரி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசைப் பார்த்து ஒரு கேள்வி கூட கேட்க தைரியமில்லாமல் தானே இருக்கிறீர்கள். நான் கேட்க விரும்புவது, எங்களைப் பார்த்து கத்தி பேசும் நீங்கள், ஒன்றிய அரசை பார்த்து கீச்சுக் குரலில் பேசக்கூட துணிச்சல் இல்லையா? உங்களுக்கு. என்ன, எதற்கு பயம்? காரணம் என்ன? உங்கள் மடியில் கனம். இந்த இலட்சணத்தில் இருக்கிறது எதிர்க்கட்சி! இப்படி தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்கள்நாள்தோறும் திட்டமிட்டு பரப்பும் அவதூறுகள்ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு என்று எல்லா தடைகளையும் கடந்து தான், நாள்தோறும் நம்முடைய அரசு செயல்படுகிறது.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com