எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் மையத்துக்கு அடிக்கல்லா?- பா.ம.க. போராட்டம்!
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் நெறிமுறைகளைப் பரப்பும் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டு மிகப்பெரிய அளவில் உலக அளவில் வள்ளலாரின் கருத்துகளை எடுத்துச்செல்லப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக வடலூரில் வள்ளலாரின் அடியார்கள் இலட்சக்கணக்கில் கூடும் இடத்தை அரசு கையகப்படுத்துவது சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது. பல அமைப்புகளும் பா.ம.க. போன்ற கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இன்று அந்த மையத்துக்கு சென்னையிலிருந்தபடியே காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், எதிர்ப்பை மீறி பன்னாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டால், பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி, இன்று வடலூர் பேருந்து நிலையத்தில் பா.ம.க.வினரும் வன்னியர் சாதிச் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வடலூர் சத்தியஞான சபையை நோக்கிச் செல்ல யார் முயன்றாலும், அவர்களைத் தடுத்துநிறுத்தும் வகையில், ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.