சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்கோப்பகப் படம்

ஏரி,குளங்களைத் தூர்வார சிறப்பு நிதி - தி.மு.க. அரசுக்கு கூட்டணிக் கட்சி யோசனை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மிக்ஜாம் புயலுக்கான நிவாரணமாக 276 கோடி ரூபாயை மட்டுமே மைய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

”மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ளத்தினால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 38,000 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை வற்புறுத்தியது. ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 276 கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். இந்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை பாரபட்சமானது.

கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த தமிழகத்திற்கு ரூ. 276 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல ஒன்றிய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாகும். கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், மாநில உரிமைக்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தொடர்வதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, ஒன்றிய அரசு தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையை  கைவிட்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரியுள்ள ரூ. 38 ஆயிரம் கோடியை உடனடியாக தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும்.” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “ தமிழகத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடலூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்டு சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட முதலமைச்சர், அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வறட்சி பாதித்த 22 மாவட்ட மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும் தமிழக மக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வீராணம் ஏரி உள்பட பல ஏரிகள், குளங்கள் காய்ந்துள்ளன. இந்த ஏரி, குளங்களை உடனடியாக தூர்வாரினால் ஏராளமான பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, மழைக்காலங்களில் மழை நீரைச் சேமிக்க வழிவகுக்கும். எனவே, ஏரி, குளங்களை தூர்வாருவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, போர்க்கால அடிப்படையில் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com