கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்ற படகு மூழ்கியது; 9 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
குளச்சல் துறையிலிருந்து ஐந்து நாள்களுக்கு முன்னர் ஒரு விசைப்படகில் 9 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் இன்று கரையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடியில் இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக பெரிய எண்ணெய்க் கப்பல் ஒன்று வந்துள்ளது. கார்லோஸ் எனும் தீவில் பதியப்பட்ட அந்த சரக்குக் கப்பல் விசைப்படகின் மீது மோதியுள்ளது.
அதனால் மீன்பிடிப் படகு கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. ஒன்பது மீனவர்களும் உயிர்தப்ப வழியில்லாமல் தவித்தனர். நல்லவேளையாக அந்த இடத்திற்குச் சென்ற சக மீனவர்கள் அவர்களைப் பாதுகாப்பாக தங்கள் படகில் ஏற்றிக்கொண்டனர்.
ஆனால், அவர்கள் கண்முன்னால் அந்த விசைப்படகு கடலில் மூழ்கியதைத் தடுக்கவும் முடியாமல் அதைப் பார்க்கவும் சகிக்காமல் வேதனைப்பட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்த குளச்சல் வட்டார மீன்பிடித் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.