கட்டி 3 மாதங்களில் ஆற்றோடு போன பாலம்- எப்படி?

கட்டி 3 மாதங்களில் ஆற்றோடு போன பாலம்- எப்படி?
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டித் திறக்கப்பட்டு மூன்றே மாதங்களான பாலம் ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்டது இன்றைய பரபரப்புகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. குறிப்பாக, அதைக் கட்டிய பொதுப்பணித் துறையின் அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பேசுபொருள் ஆகிவிட்டது.

இதுகுறித்து அமைச்சர் வேலு இன்று மாலையில் விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் ஃபெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் சேதமடைந்தது.

நீளம் - 250 மீ (20.8 மீ நீளத்தில் 12 கண்கள்), அகலம் – 12 மீ, ஆண்டு சராசரி மழை அளவு, சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, வேகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆற்றுபடுக்கையில் இருந்து வடிவமைக்கப்பட்ட நீர்வழியின் உயரம் - 5 மீ. மற்றும் பாலத்தின் உயரம் - 7 மீ.

நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் (Design Discharge) 54,417 கன அடி. திறந்த வெளி அடித்தளம் மற்றும் 11 வட்ட வடிவ தூண்கள் அமைத்து பாலம் நல்ல தரத்துடன் கட்டிமுடிக்கப்பட்டது.

தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.” என்று அமைச்சர் வேலு கூறியுள்ளார். 

மேலும். ”இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com