ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
தமிழகத்தின் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஆகஸ்டு 9ஆம் தேதி இந்தப் பிரச்சாரம் தொடங்குகிறது. ஸ்டெர்லைட் வெளியேற்றம் குறித்து இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
அடுத்து, 10ஆம் தேதி, கடையநல்லூரில் ’மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்’ என்கிற தலைப்பில் வைகோ பேசுகிறார்.
ஆகஸ்டு 11இல், தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியாறும் நியூட்ரினோவும் பற்றியும்
12ஆம் தேதி, திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்றும்,
13ஆம் தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும் மீத்தேனும் என்றும்,
14ஆம் தேதி நெய்வேலியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடர்பாகவும்,
18ஆம் தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் எனும் தலைப்பிலும்,
19ஆம் தேதி சென்னை, திருவான்மியூரில் சமூக நீதியும் திராவிட இயக்கமும் எனும் தலைப்பிலும் வைகோ உரையாற்றுகிறார்.
நீண்ட காலத்துக்குப் பிறகு, பல்வேறு அரசியல் தலைப்புகளில் வைகோ உரையாற்றுவது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியது.
இந்த அனைத்துக் கூட்டங்களிலும் கட்சிப் பொருளாளர் மு.செந்திலதிபனும் கவிஞர் மணிவேந்தனும் உரையாற்றுவார்கள்.