கேரளத்தில் இறந்த 4 தமிழர் குடும்பங்களுக்கு முதல்வர் ஆறுதல், நிதி!

4 tamils killed in kerala train mishap
கேரளத்தில் ரயில் மோதி 4 தமிழர்கள் இறப்பு
Published on

கேரள மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில் உயிரிழந்த தமிழ்நாட்டின் துப்புரவுப் பணியாளர்கள் நால்வரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில்  நேற்று (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் இரயில் பாதையைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.லட்சுமணன் (வயது 55), வள்ளி (வயது 45), காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த திரு.லட்சுமணன் (வயது 45), அல்லிக்குட்டையைச் சேர்ந்த திருமதி.ராஜம்மாள் (வயது 43) ஆகியோர் உயிரிழந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com