சிவில் நீதிபதியான ஸ்ரீபதி
சிவில் நீதிபதியான ஸ்ரீபதி

23 வயதில் சிவில் நீதிபதி ஆன பழங்குடியினப் பெண் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

உரிமையியல் நீதிபதித் தேர்வில் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி வெற்றி பெற்றதையொட்டி முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

” திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!

“நெடுந்தமிழ்  நாடெனும் செல்வி, - நல்ல

  நிலை காண வைத்திடும்;  பெண்களின் கல்வி!

 பெற்றநல்  தந்தை தாய் மாரே, - நும்

 பெண்களைக் கற்க வைப் பீரே!

 இற்றைநாள் பெண் கல்வி யாலே, - முன்

 னேற வேண்டும் வையம் மேலே!” “ என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com