சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் 28 தீர்மானங்கள்... என்ன சிறப்பு?

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கூட்டம், மறைமலை நகர்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கூட்டம், மறைமலை நகர்
Published on

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று நடைபெறுகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமைவகித்தார்.

தீர்மானங்கள் விவரம் :

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த காலக்கெடு

‘ஒன்றிய அரசு அதன் அதிகாரத்தின்  கீழ்வரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என திராவிடர் கழகம் தொடர்ந்து பல மாநாடுகளிலும், தீர்மானம் நிறைவேற்றி வந்தது. பா.ஜ.க. தவிர்த்து, அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன. 


தங்கள் கட்சிக் கொள்கை அளவில் மட்டுமல்லாது; அரசின் கொள்கை முடிவாகவும் ‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடியாது’ என்று நீதிமன்றத்திலும் தெரிவித்திருந்த பா.ஜ.க. அரசு, வரவிருக்கும் பீகார் தேர்தலைக் கருத்தில் கொண்டு, திடீரென, ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்போடு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்திட அமைச்சரவை முடிவு செய்துள்ள’தாகத் தெரிவித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. 


ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும், எப்போது வெளியிடப்படும், படிவத்தில் என்னென்ன தரவுகள் கேட்கப்படும் என்னும் விவரங்களையும் ஒன்றிய அரசு நிர்ணயித்து வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்க வேண்டும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.


ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் ஒன்றிய அரசின் நாசகாரச் செயல்


திராவிடர் கழகம் தொடர்ந்து சொல்லி வரும் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் ‘தேசியக் கல்விக் கொள்கை - 2020’ என்பது நவீன குலக் கல்வித் திட்டமே என்பதை ஒன்றியஅரசு மீண்டும் நிரூபித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை - 2020இன்படி, பொதுத் தேர்வில் 30 சதவிததிற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால் 3, 5, 8ஆம் வகுப்பில் தோல்வி என்ற நடைமுறை பள்ளிகளில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருந்து வந்த ‘8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி’ என்ற முறை மாற்றப்பட்டு, தற்போது இந்தப் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் தோல்வி ஆக்கச் சம்மதிப்பதாகப் பெற்றோர்களிடமே ஒப்புதல் கடிதம் பெற்று வருவது கொடுமையிலும் கொடுமையாகும். இந்த நடைமுறை மாணவ, மாணவிகளின் இடைநிற்றலுக்கு வழிவகுப்பதோடு, குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை. எல்லோரும் படிக்கக் கூடாது என்பது ஆரியக் கல்விக் கொள்கை; அனைவரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல் கொள்கை. ஆரியக் கொள்கைகளைச் செயல்படுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் இந்தத் திட்டத்தைப் பெற்றோர் மட்டுமன்றி அனைவரும் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.


‘கிரிமிலேயர்’ முறை ஒழிக்கப்பட வேண்டும்!


அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ‘கிரிமிலேயர்’ எனும் சமூக அநீதி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தற்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, அரசியலமைப்புச் சட்டத்தின் 105ஆம் திருத்தத்தை மேற்கொண்ட நிலையில், பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி., என எந்தப் பிரிவினரையும் ‘கிரிமிலேயர்’ என்ற பாகுபாடு காட்டிப் பிரிக்க முடியாது என்ற சட்ட வல்லுநர்களின் கருத்தை, ஒன்றிய அரசு ஏற்று, உரிய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும். இதுகுறித்துத் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அரசின் கவனத்திற்கும் ஏனைய மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


யு.பி.எஸ்.சி.யில் தேர்வான பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் பணியில் அமர்த்துக!


யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பலருக்கும் (ஏறத்தாழ நூறு பேர்), ‘கிரிமிலேயர்’ என்ற காரணம் காட்டி, பதவி நியமனம் செய்யப்படாமல் ஒன்றிய அரசின் பணியாளர் நலத் துறை காலதாமதம் செய்வது சமூக அநீதியாகும். உடனடியாக அவர்களுக்குப் பதவி நியமன ஆணை தந்திட வலியுறுத்துவதுடன், இது குறித்து நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒன்றியப் பணியாளர் துறை இணை அமைச்சரை வலியுறுத்தவும் வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.


இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது!


EWS என்ற உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு என்பதே பெரிய மோசடி; அத்தோடு நில்லாது, அவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை, விண்ணப்பப் படிவச் சலுகை என ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்குவதும், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இதே போன்ற வாய்ப்புகளை வழங்காமல் இருப்பதும், ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு, சமூக நீதிக்கு எதிரான அரசே என்று தனக்குத்தானே பிரகடனப்படுத்தும் செயலாகும். இதனை அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்பதோடு, இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று  முதல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே பொருளாதார அளவுகோல் என்பது நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் இம்மாநாடு நினைவூட்டுகிறது.


தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு தேவை


பொதுத் துறை நிறுவனங்கள் அருகி, தனியார்த் துறை நிறுவனங்கள் நாளும் பெருகி வருவதால், தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை. அதுதான் உண்மையான சமூக நீதியாகும். ஆகையால், தனியார்த் துறைகளிலும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது


அரசுப் பணி உயர்விலும் இடஒதுக்கீடு


அரசுப் பணிகளில் தொடக்க நிலையில் மட்டுமல்லாமல், உயர் அதிகாரப் பணிகளுக்குச் செல்லக்கூடிய வகையில் அனைத்து மட்டத்திலும் பதவி உயர்விலும் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு உரிமை தரப்பட வேண்டும். பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு, அரசமைப்புச் சட்டத்தில் இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புகளினால் ஒரு தேக்கநிலை நீடிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு பணி உயர்வுக்கான சட்ட விதிகளே இதுவரை உருவாக்கப்படவில்லை. 


எல்லாக் கட்ட அரசுப் பணி உயர்விலும் பட்டியலின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில், நீதிமன்ற நடவடிக்கைகளினால் தேக்கநிலை ஏற்படாதவாறு அரசியலமைப்புச் சட்ட விதிகளில் திருத்தத்தினைச் செய்து, அரசாணைகளைப் பிறப்பிக்க ஒன்றிய அரசையும், மாநில அரசுகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


வெளிநாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள ஏதுவாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கும் கல்வி ஊக்கத் தொகையைத் (ஸ்காலர்சிப்) தமிழ்நாடு அரசு அளித்திடுமாறு இம்மாநாடு கோருகிறது.


அண்மையில் சிறுபான்மையினருக்கும், விரிவாக்கப் பட்டுள்ள இத்திட்டத்திற்குச் சிறிதுகாலம் வயது வரம்பைத் தளர்த்திடுமாறும் இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.


தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில்
தேசிய கல்விக் கொள்கை கூடாது!


ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்கள் தேசியக் கல்விக் கொள்கையின் (NEP-2020) பல கூறுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன என்பதாகச் செய்திகள் வந்துள்ளன. தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு ஆளும் திராவிட மாடல் அரசின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், யு.ஜி.சி உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை தங்கள் மனிதவள மேம்பாட்டு (HRD) மய்யங்களை ‘மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மய்யங்'களாக மறு பெயரிட்டுள்ளன எனவும் செய்திகள் வந்துள்ளன. இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


கூட்டாட்சி முறையிலான வரி வருவாய் பகிர்வு, மாநில அரசுகளின் வரி வசூல் 


நல்லாட்சி, மக்கள் நல ஆட்சி வழங்குவதற்கு பொது நிதி ஆதாரம் முக்கியத் தேவையாகும். நாடு விடுதலை பெற்றபொழுது, மாநிலங்கள் பிரிவினை கேட்கும் நிலை வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசே அதிகப்படியான வரி வருமானத்தைப் பெறும் வகையில் பொதுநிதி மேலாண்மை நிலவியது. ‘குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்தது’ என்ற வழக்கு மொழிக்கு இணங்க தற்போது ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளின் அதிகார வரம்பில் இருந்து பெரும்பான்மை வரிகளை ஒன்றாக்கி, நேரடியாக மக்களிடமிருந்து வசூல் செய்து கொண்டிருக்கிறது. இதனால் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் உள்ள மாநில அரசுகள், நிதி ஆதாரத்தை ஒன்றிய அரசிடமிருந்து எதிர்பார்த்து இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. நியாயமற்ற வரி வருவாய்ப் பகிர்வானது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு முரணானது. உரிய நிதியின்றி நல்லாட்சி வழங்குவது இயலாத ஒன்றாகும். வசூலிக்கப்படும் வரி வருவாய் உரிய வகையில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் இடையே நியாயமாகப் பிரிக்கப்பட வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்படும் வரிகள் நியாயமான அளவில் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.


மாநில அரசுகளின் அதிகார உரிமைகள் மீட்பு


இந்திய நாட்டை ஆள்வது அரசமைப்புச் சட்டம். இந்தச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்த அதிகார வரம்புகள் கடந்த ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நீர்த்துப் போகும் வகையில் ஒன்றியத்தை ஆண்ட -  ஆளும் அரசுகள் செய்து கொண்டே வந்துள்ளன. 


மக்களுடன் நேரடியாக அன்றாடம் தொடர்பில் உள்ள, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலப்படுத்திட, மாநில உரிமைகளை அதிகரிக்கச் செய்ய, உரிய சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. 


மூடநம்பிக்கை ஒழிப்புக்குத் தனிச் சட்டம் தேவை


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h), அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பது, எதையும் கேள்விக்குட்படுத்தும் முனைப்பைக் கூராக்குவது, சீர்திருத்தம், மனித நேயத்தைப் பெருக்குவது ஆகியவற்றை குடிமக்களின் அடிப்படைக் கடமையாகக் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் இந்தப் பிரிவு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே சமூகத்தில் புரையோடிப் போயிருந்த மூடநம்பிக்கைப் பழக்க வழக்கங்களை எதிர்த்து மக்களிடம் அறிவியல் அடிப்படையிலான பிரச்சாரத்தைச் சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இன்னொரு புறம் மத வியாபாரிகள் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றனர்.


மக்களை மடமைப்படுத்தி, முடக்கிப் போடும் மூடநம்பிக்கைகளை ஒழித்திட தமிழ்நாடு மாநில அரசு தனிச் சட்டத்தினை இயற்ற வேண்டும்.
மந்திரம், பில்லிசூனியம், நரபலி போன்ற கொடுமைகள் துளிர்விடச் செய்யாமல் பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளை விதைக்கும் வகையிலும், வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டங்களை கல்விக் கூடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மாநில, ஒன்றிய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.


மாநில ஆளுநர் பதவிகள் அகற்றப்பட வேண்டும்


பிரிட்டீஷாரால் நிருவாக வசதிக்காக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவி - ஜனநாயக ஆட்சிக்கு விரோதமானது என்பதால், ஆளுநர் பதவியை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும்  இந்த வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.


மூன்றுமுறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட வன்முறை இயக்கமான - ஹிந்துராஷ்டிரம் என்ற மதவாதக் கொள்கையுடைய - ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒட்டி ஒன்றிய பிஜேபி அரசு அதிகாரப்பூர்வமாக அஞ்சல் தலை வெளியிட்டும், ரூபாய் நாணயம் வெளியிட்டும், மதச்சார்பற்ற அரசுக்கான பிரதமர் புகழாரம் சூட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை இம் மாநாடு அறுதியிட்டுத் தெரிவித்துக் கொள்கிறது.


தொல்லியல் துறை ஆய்வுகளும்,
பிஜேபி ஆட்சியின் திரிபு வேலைகளும்! 


தொல்லியல் துறை அறிஞர்களாலும், நிபுணர்களாலும் ஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட திராவிட நாகரிகத்திற்குப் பதிலாக ஆரிய நாகரிகமே என்று மாற்ற வேண்டும் என்று அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி, நிர்ப்பந்திக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் வரலாற்றுத் திரிபு நடவடிக்கைக்கு இம் மாநாடு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் போக்கை ஒன்றிய பிஜேபி அரசு நிறுத்தாவிட்டால் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று இம் மாநாடு எச்சரிக்கிறது!


ஆணவக் கொலை தடுப்புச் சட்டமும் -
பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியும்!


ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தச் சட்டம் அவசியம் தேவை. பாலியல் வன்கொடுமை, வழிப்பறி இவைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள, கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.


குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுக!

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நம் மக்கள் வீடுகளில் கூட குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டாமல் சமஸ்கிருதம் கலந்த பெயர்களைச் சூட்டுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழிலேயே பெயர் சூட்டுவது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தமிழின மக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.


மது, போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்களை மீட்போம்!

மது அருந்துவது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல் என்ற பொல்லாப் பழக்கங்கள், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது கவலை அளிக்கக்கூடிய பெருந் தீமையானதாகும்.


இது தனிப்பட்டவர்களின் தீமை என்பதைவிட சமுதாயத்தைப் பீடித்த பெரும் தொற்று நோயாகும்.

கல்விக் கூடங்களில் மாணவர்களை ஒழுக்கரீதியாக உருவாக்குதோடு, மாணவர்கள் மதுவை ஒழிப்போம் - போதையை ஒழிப்போம் என்ற பதாகைகளை ஏந்தி வீதிகளில் அணிவகுக்கச் செய்து இந்த வகையில் முழக்கமிடச் செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துவதோடு, வீட்டில் மூத்தவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளானால் அதன் தாக்கம் வீட்டில் உள்ள இளைஞர்களிடமும் அந்தத் தீய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இம்மாநாடு எச்சரிக்கின்றது.


நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்துக!


1996ஆம் ஆண்டு தேவகவுடா பிரதமராக இருந்த காலந்தொட்டு, சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டு வருகிறது.1998, 1999, 2003 ஆகிய ஆண்டுகளிலும் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதிர்ப்பால் நிறைவேற்றப்படவில்லை. 2010ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது (9.3.2010). ஆனால், மக்களவையில் நிறைவேறாமல் போனதால் சட்டமாகவில்லை.


இறுதியில் 2023 சிறப்பு அமர்வில் 106ஆவது அரசமைப்புத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், கடந்த மக்களவைத் தேர்தலில்கூட (2024) செயல்படுத்தப்படவில்லை. அதற்குப் பின் பல மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றும் இச்சட்டம் செயல்படுத்தப்படவில்லை. இனியும் இதில் காலதாமதமின்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.


ஜாதி ஒழிப்புக்கே முதலிடம்!

திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை ஜாதி ஒழிப்பாகும். மக்கள் மத்தியில் ஜாதி உணர்வை முற்றிலும் துடைத்து எறியும் வகையில் அடைமழைப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும், ஆங்காங்கே வட்டார மாநாடுகளை இதற்காகத் தொடர்ந்து நடத்துவது என்றும், ஜாதிப் பிரச்சினை தலைதூக்கும் பகுதிகளுக்கு உடனடியாகச் சென்று தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com