சென்னைச் சிறுமி வன்கொடுமை - ஆளுங்கட்சியைப் பாதுகாக்கும் காவல்துறை!

chennai girl child harassed
சிறுமி மீது வன்கொடுமை(மாதிரிப் படம்)
Published on

சென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது என்றும்  ஆளுங்கட்சியினரைக் காப்பதும், எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும்தான் பணியா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். 


”சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  வழக்கில் சென்னை மாநகரக் காவல்துறையின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை  விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 இ.கா.ப. அதிகாரிகளின் பெயர்களை வழங்கும்படி ஆணையிட்டுள்ளது. தமிழக காவல்துறை எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம்தான் சான்று.” என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

”அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம்  தொடர்ந்து  ஒரு வாரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதுடன்,  சிறுமியின் தாய் நடத்தை மீதே  சந்தேகம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை கசிய விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள  முடியாது.” என்றும், 

”காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி,  வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த  மாதம் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது  தான் தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் ஆகும். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை  சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம்  காவல்துறையின் தவறுகளுக்கு துணை போகிறது என்றுதான் பொருள்.” என்றும் அன்புமணி கூறியுள்ளார். 

மேலும், ”ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது. காவல்துறை எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது; எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பழிவாங்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம். தமிழக காவல்துறையின் சிறப்புகளையும் பெருமைகளையும் பாதுகாக்கும் வகையில் காவல் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.” என்றும் அன்புமணி கூறியுள்ளார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com