சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வரும் 14ஆம் தேதி அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது.
பொது விநியோகத் திட்டம் மாநில அளவில் ஒவ்வொரு வழங்கல் வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி டிசம்பர் 2024 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.12.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
”குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.