சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில், முதலமைச்சர் ஸ்டாலினுடன் வெளிநாட்டு தமிழ் மரபுவழியின மாணவர்கள்!
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில், முதலமைச்சர் ஸ்டாலினுடன் வெளிநாட்டு தமிழ் மரபுவழியின மாணவர்கள்!

சென்னையில் அயலகத் தமிழர் நாள் கோலாகலம்!

மூன்றாவது ஆண்டாக தமிழக அரசின் சார்பில் அயலகத்தமிழர் நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில், பல துறை வல்லுநர்களுக்கு விருதுகளை வழங்கி, எனது கிராமம் எனும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின்தொடங்கிவைத்தார்.

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சென்னை வர்த்தக மையத்தில் “அயலகத் தமிழர் தினம் 2024” விழா நடைபெற்றது.

இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் முதலியோர் பங்கேற்றனர்.

அயல்நாடுகளில் வசிக்கும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.    

முதல் நாளான நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கிவைத்து, நாற்பதுக்கும் மேற்பட்ட காட்சி அரங்குகளை திறந்துவைத்தார். சிறப்பு நேர்வாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடும் நடைபெற்றது.  

முதல் நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்களும் ஒரு கவியரங்கமும் நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  தமிழின் தொன்மை – தொடர்ச்சி  குறித்து துறைசார் வல்லுநர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். தொடர்ந்து, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை – தொலைநோக்குச் சிந்தனையும் செயலும் என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஒளிரும் எதிர்காலம் – வாய்ப்புகளும்  சவால்களும்  என்ற தலைப்பிலும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் வணிகத்தில் தமிழர்கள் – வாய்ப்பும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலும்  கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இரண்டாம் நாளான இன்று முதலமைச்சர் ஸ்டாலின்‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டு உள்துறை - சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘வேர்களை தேடி’ திட்டத்தின் கீழ்  ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தங்களது பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்தனர்.  

சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்கும் விதமாக,  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் சுதாகர் பிச்சைமுத்து, தமிழ் இலக்கியப் பிரிவில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தின்னப்பன் மற்றும் அமெரிக்க நாட்டின் வைதேகி ஹர்பேர்ட், மருத்துவப் பிரிவில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஜெயராம் லிங்கமாணிக்கர், கல்விப் பிரிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த முருகேசு பரமநாதன், சமூக மேம்பாட்டுப் பிரிவில் மலேசியா நாட்டைச் சேர்ந்த டத்தோ எம். சரவணன், மகளிர் பிரிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சித்ரா மகேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டைச் சேர்ந்த ஜெசிலா பானு,  விளையாட்டுப் பிரிவில் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ராமன் குருசாமி மற்றும் குவைத் நாட்டைச் சேர்ந்த சரண்யா தேவி, வணிகப் பிரிவில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பக்கிரிசாமி ராஜமாணிக்கம் மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த சையது முகமது சலாவுதீன் ஆகியோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின்  தங்கப் பதக்கம், பாராட்டு பட்டயம் வழங்கினார். 

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், மலேசியா நாட்டு சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன், இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மலேசியா நாட்டு முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சதாசிவம், கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, இங்கிலாந்து நாட்டின் அமஸ்பரி மேயர் சாருலதா மோனிகா தேவேந்திரன், ஆஸ்திரேலியா நாட்டின் ரிவர்டன் உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரவீந்திரன், டர்பன் முன்னாள் துணை மேயர் லோகி நாயுடு, ஜூம் டெக்னாலஜி தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com