சென்னையில் அரசு வீடு இடிந்து ஒருவர் பலி- காரணம் என்ன?

சென்னையில் அரசு வீடு இடிந்து ஒருவர் பலி- காரணம் என்ன?
Published on

சென்னை-பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்ககக் குடியிருப்பில் சன்னல் விழுந்து நேற்று இரவு ஒருவர் இறந்துவிட்டார். இதுகுறித்து மீனவர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மீது குறைகூறியுள்ளன. 

இந்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்குப் பொறுப்பான குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உயிரிழப்புக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

அதில், ”தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் திட்டப்பகுதியில் 1965-1977 ஆண்டு வரை 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 60 ஆண்டு நீண்ட கால  பயன்பாட்டாலும் தட்ப வெட்ப மாறுப்பாட்டாலும் கட்டடம் சிதலமடைந்த நிலையில் இருந்தது. தொழில் நுட்ப வல்லுநர் குழுக்களை கொண்டு ஆய்வு செய்ததில் இக்கட்டடங்களை அகற்றிவிட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை நிறைவேற்றும் வகையில் 20.01.2022 மற்றும் 09.03.2022 ஆகிய நாட்களில் குடியிருப்புகளை காலி செய்ய வாரியத்தால் அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டது. மேலும், 08.07.2022 அன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையிலும்  18.09.2022 அன்று தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும்  09.09.2024 வாரிய கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலும் 23.09.2024, 06.11.2024 மற்றும் 11.11.2024 ஆகிய நாட்களில் வாரிய நிர்வாகப் பொறியாளர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கிராம மீனவர் சபையினருடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த கூட்டங்களில் குடியிருப்பை காலி செய்வதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.” என்றும், 

இந்த நிலையிலேயே, ”நேற்று (04.12.2024) இரவு 134-வது பிளாக் மூன்றாம் தளத்தில் ஜன்னலின் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் திரு.சையத் குலாப் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.” என்றும் விவரித்துள்ளார்.

அவரின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ரூ.5.00 இலட்சம் நிவாரண நிதியாக வாரியத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பரசன் கூறியுள்ளார். 

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து சிதலமடைந்த குடியிருப்புகளை காலி செய்து தரும் பட்சத்தில் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு வாரியத்தால் புதிய குடியிருப்புகள் கட்டி குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும்; இடைப்பட்ட காலத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.24,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com