சென்றார்கள், வந்தார்கள்... நிமிடங்களில் முடிந்த அமைச்சர் பொன்முடி பதவியேற்பு!
தமிழ்நாட்டு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார்.
முன்னரே, அறிவிக்கப்பட்டிருந்தபடி, மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைப் பெற்ற பொன்முடி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இரண்டாவது முறையாக இந்த ஆட்சியில் அமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு தொடங்கியது.
கிண்டி, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்குள்ள அதிகாரிகள் புத்தகமும் பூங்கொத்தும் கொடுத்து வரவேற்றனர். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியனும் காரில் உடன் சென்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும், ஆளுநர் இரவி பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
நிறைவாக, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மொத்த நிகழ்வும் ஐந்தரை நிமிடங்களில் முடிந்துவிட்டது.
முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வியைக் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்த அமைச்சர் இராஜ கண்ணப்பனுக்கு, கதர்- கிராமத் தொழில் வாரியம் துறை இப்போது கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.