பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு உடனடி ஜாமின் - அறிக்கை கேட்ட உயர்நீதிமன்றம்!
பொய்யான ஆவணங்களை உருவாக்கி தனி நிறுவனத்தை நடத்தி முறைகேடு செய்த சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டக் குற்றச்சாட்டின்படியும் வழக்கு பதியப்பட்டது. ஆனால், அவருக்கு சேலம் இரண்டாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி உடனடி பிணை வழங்கி உத்தரவிட்டார். இதனால் ஜெகநாதன் சிறைக்குச் செல்லாமல் தப்பித்தார்.
அசாதாரணமாக நிகழ்ந்த இந்தப் பிணை சர்ச்சைக்கு உள்ளானது. ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துசெய்யக் கோரி சேலம் காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்கில் எப்படி ஒருவருக்கு பிணை வழங்கமுடியும் என்கிற வாதத்தை உள்வாங்கிக்கொண்டு, இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சேலம் நடுவருக்கு உத்தரவிட்டனர்.
வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.