முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமியை அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் விரட்டியடித்தனர்.
அ.தி.மு.க.வின் மறைந்த தலைவர் ஜெயலலிதாவின் மகள் என தன்னைக் கூறிக்கொள்ளும் பிரேமா என்ற ஜெயலட்சுமி தானும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மனு கொடுக்க வந்திருந்தார். கடந்த மாதம் 23ஆம்தேதி அவர் மனு கொடுக்க வந்தபோது, தலைமைக்கழக நிர்வாகிகள் யாரும் மனுவைப் பெற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும் இன்று மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் விருப்ப மனு பரிசீலனை, நேர்காணல் இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்றது. இதையொட்டிதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாகக் கூறிக்கொண்டு, அதற்கான நேர்காணலுக்காக ஜெயலட்சுமி வந்தார்.
முதலில் அவரின் வாகனத்தைக் கண்டுகொள்ளாத நிர்வாகிகள், பின்னர் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்ததும், அவருடைய வண்டியை அலுவலகத்துக்குள் போகவிடாமல் வாக்குவாதம் செய்தனர். ஜெயலட்சுமியும் அவருடன் வாக்குவாதம் செய்தார். ஆனாலும் அவருடைய வண்டியை உள்ளேவிடாமல் அ.தி.மு.க.வினர் விரட்டியடித்தனர்.