டிஜிட்டல் சர்வே- மாணவர்கள் மீது தாக்குதல்!

டிஜிட்டல் சர்வே- மாணவர்கள் மீது தாக்குதல்!
Published on


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் கல்லூரி மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்றபோது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர்.

வேளாண் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர்களை அப்பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். 


”டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதால் செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?” என்று முன்னரே பா.ம.க.  கேள்வி எழுப்பியிருந்தது.

அதை உறுதிசெய்யும்வகையில்தான் திருவள்ளூர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.   

”சில நாள்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில்  டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளுக்குச் சென்ற ஒரு மாணவி பாம்பு கடித்ததாலும், இன்னொரு மாணவி விசப்பூச்சி கடித்ததாலும்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக மாணவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதி வரை டிஜிட்டல் பயிர் சர்வே மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் இன்னும் என்னென்ன பாதிப்புகள் நிகழும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

டிஜிட்டல் பயிர் சர்வே  பணிகள் மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவோ தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது  தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com