தமிழ்நாடு கிராம வங்கி தனியாருக்கா?

தமிழ்நாடு கிராம வங்கி தனியாருக்கா?
Published on

கிராம வங்கிகளை பலவீனப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என்றும் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யவும், விவசாயிகளின் நலனை காக்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் த.வா.க. தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


”இந்தியாவின் நிதித்துறையில் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராம வங்கிகள் என மூன்று முக்கியத் தூண்கள் உள்ளன. இதில் 1975-ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட கிராம வங்கிகள், இன்று 43 வங்கிகளாக ஒருங்கிணைக்கப்பட்டு 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் 42 கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருகின்றன.

1969 மற்றும் 198ஆம் ஆண்டுகளில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டாலும், கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு முழுமையான வங்கிச் சேவை என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

இச்சூழலில், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய 1976ஆம் ஆண்டு தனிச் சட்டம் இயற்றப்பட்டு கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் மூர்தாபாத் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பிரதம கிராம வங்கி’ இந்தியாவின் முதல் கிராம வங்கியாக உதயமானது.

கிராம வங்கிகள் முழுமையான பொதுத்துறைத் தன்மையுடன் தொடங்கப்பட்டவை. இதன் 100 விழுக்காடு பங்குகளில் ஒன்றிய அரசு 50 விழுக்காடும், மாநில அரசு 15 விழுக்காடும் மற்றும் அந்தந்த மாநில ஸ்பான்சர் வங்கிகள் 35 விழுக்காடும் பங்குகளைக் கொண்டுள்ளன.

இந்த வங்கிகள் ஒன்றிய அரசு, மாநில அரசு, நபார்டு மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளைக் கொண்ட உயர்மட்ட இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. இவை வழங்கும் மொத்த  கடன்களில் 80 விழுக்காடு விவசாயம், சிறுதொழில் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற முன்னுரிமைப் பிரிவுகளுக்கே வழங்கப்படுகின்றன.

கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதிலும், விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்குவதிலும் இவ்வங்கிகளின் பங்கு மகத்தானது.

தனியார்மயத் தாக்குதல்  கடந்த 2015-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின் மூலம், கிராம வங்கிகளின் பங்குகளைச் சந்தையில் விற்க ஒன்றிய அரசு வழிவகை செய்தது.

அதன் முதற்கட்டமாக, தற்போது மிகச் சிறப்பாக லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, கேரளா மற்றும் அரியானா கிராம வங்கிகளின் 49 விழுக்காடு பங்குகளைப் பொதுப்பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய மார்ச்  இறுதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் 2027-க்குள் குறைந்தது 5 கிராம வங்கிகளின் பங்குகளைப் பட்டியலிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

பங்கு விற்பனையால்  ஏற்படும் விபரீதங்கள் தற்போது இந்த மூன்று மாநில கிராம வங்கிகளும் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து போதிய லாபத்தையே ஈட்டி வருகின்றன. அப்படி இருக்கையில், நிதி திரட்டுவது என்ற போர்வையில் பங்குகளை விற்பது பாஜக அரசின் கார்ப்பரேட் சேவகத்தையே வெளிப்படுத்துகிறது.

தனியார் முதலீடு  நுழையும்போது, நிர்வாகக் குழுக்களில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஓங்கும். மக்கள் சேவை என்பது மறைந்து லாபம் மட்டுமே குறிக்கோளாக மாறும்.

முன்னுரிமைக் கடன்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும். லாபம் தராத கிளைகள் மூடப்படும் அபாயம் உள்ளதால், அரசு நலத்திட்டங்கள் மக்க ளைச் சென்றடைவதில் முட்டுக்கட்டை ஏற்படும்.

கிராம வங்கிகள் பலவீனமடையும் போது, அந்த இடத்தை சிறு நிதி தனியார் வங்கிகளும், கந்துவட்டி பாணியிலான நிதி நிறுவனங்களும் ஆக்கிரமித்து எளிய மக்களைச் சுரண்டும் சூழல் உருவாகும்.

எனவே, நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார அரணாக விளங்கும் கிராம வங்கிகளைக் காக்கவும், குறிப்பாக தமிழ்நாடு கிராம வங்கியின் பொதுத்துறைத் தன்மையைக் காக்கவும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் போக்கை தடுத்து நிறுத்த ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளை ஒன்று திரட்ட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கடமை.” என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com