
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“ திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தையொட்டி 100 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகத் தீபம் ஏற்றிவரும் இடத்தை மாற்றியும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றமாக விளங்கிய தனியுரிமை மன்றம் (Privy Council) அளித்துள்ள தீர்ப்பிற்கு எதிராகவும், இசுலாமியத் தர்கா அருகே தீபத்தை ஏற்றி திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியைக் கலவரமாக மாற்றுவதற்கு மதவெறியர்கள் வகுத்த சதித் திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்து அமைதியை நிலைநாட்டியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை உளமாறப் பாராட்டுகிறேன்.
மதக் கலவரங்களுக்கு இடமளிக்காமல் மத நல்லிணக்கத்துடன் அமைதியாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களிடையே கலவரத்தை மூட்டிக் குளிர்காய விரும்பும் மதவெறியர்களுக்கு எதிராகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வருமாறு வேண்டுகிறேன்.
நீதிநெறியைப் பின்பற்றாமல் மதவெறியர்களுக்குத் துணையாகச் செயல்பட்டுவரும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை வேண்டிக்கொள்கிறேன்.” என்றும் பழ. நெடுமாறன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.